தேர்தல் பணியில் ஈடுபட உள்ள முன்னாள் படைவீரர்கள் வரும் 16-ஆம் தேதி ஆயுதப்படை மைதானத்துக்கு நேரில் வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான த. அன்பழகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
வரும் 18-ஆம் தேதி நடைபெற மக்களவைத் தேர்தலில் காவல்துறைக்குத் துணையாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ள கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விருப்ப விண்ணப்பம் சமர்ப்பித்த முன்னாள் படைவீரர்கள், இளநிலை படை அலுவலர்கள் மற்றும் விருப்ப விண்ணப்பம் சமர்ப்பிக்காத, தேர்தல் பணிக்குச் செல்ல விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் அதற்கான ஆயத்தங்களுடனும், அசல் படைவிலகல் சான்று மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடனும் கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அருகிலுள்ள ஆயுதப்படை மைதானத்துக்கு வரும் 16-ஆம் தேதி காலை 8 மணிக்கு நேரில் வர வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் 90038-29969 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.