மீன் பிடிக்க வாய்க்காலில் இறங்கிய இளைஞர் மூழ்கி இறந்தார்.
கரூர் மாவட்டம், புகழூர் அன்னை நகரைச் சேர்ந்தவர் செல்வபாரதி (24). ஜே.சி.பி. ஓட்டுநர். இவர் செவ்வாய்க்கிழமை மலையம்பாளையம் செல்லும் பிரிவில் உள்ள பாப்புலர் முதலியார் வாய்க்காலில் இறங்கி மீன் பிடிக்கச் சென்றுள்ளார்.
அப்போது அவர் திடீரென ஆழமான பகுதிக்குச் சென்றதால் நீரில் மூழ்கினார். அப்பகுதியினர் காப்பாற்ற முயன்றும் முடியாததால் வேலாயுதம்பாளையம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அவர்கள் வந்து செல்வபாரதியின் உடலை மீட்டனர். வேலாயுதம்பாளையம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.