மருத்துவ முகாமை புறக்கணித்து மாற்றுத் திறனாளிகள் போராட்டம்
கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை புறக்கணித்து மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாதத்தின் 2 மற்றும் 4 ஆவது வார புதன்கிழமைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக புறநோயாளிகள் பிரிவில் இரண்டாவது மாடியில் முகாம் நடத்தப்பட்டு வந்துள்ளது. இரண்டாவது மாடியில் முகாம் நடப்பதால் மாற்றுத்திறனாளிகள் இரு மாடிகளையும் கடந்து செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வந்தனர்.
எனவே ஏற்கனவே செயல்பட்டு வந்த சித்த மருத்துவப் பிரிவு அருகே மீண்டும் முகாம் நடத்த வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் மாவட்ட ஆட்சியர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்தனர்.
ஆனால் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் புதன்கிழமை வழக்கம் போல, புறநோயாளிகள் பிரிவின் இரண்டாவது மாடியில் நடைபெற்றதால் ஆத்திரமடைந்த மாற்றுத்திறனாளிகள் முகாமில் பங்கேற்காமல் புறக்கணித்துவிட்டு கீழே இறங்கினர் . இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி, மருத்துவமனைக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கடவூர் உள்ளிட்ட மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் கூட்டத்தில் பங்கேற்க வருகிறோம். அதிகாலையிலே வருவதால் சாப்பிடக்கூட முடிவதில்லைஎன்றனர்.
இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி, தற்போது சக்கர நாற்காலி மூலம் முகாம் நடக்கும் இடத்திற்கு அழைத்துச்செல்லப்படுவர். இனி ஏற்கனவே நடைபெற்ற சித்த மருத்துவப்பிரிவு அருகே நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறியதையடுத்து அவர்கள் புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டு முகாமில் பங்கேற்றனர்.