ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழர் தேசிய கொற்றம் வலியுறுத்தியுள்ளது.
கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்:
பள்ளர், குடும்பர், காலடி, பண்ணாடி உள்ளிட்ட ஏழு உள்பிரிவுகளை தேவேந்திர வேளாளர் என்ற ஒற்றைப்பெயரால் அரசு ஆணையாக அறிவிக்க வேண்டும். காவிரியாற்றில் வெள்ளப் பெருக்கை கட்டுப்படுத்த ஆற்றின் குறுக்கே 25 கி.மீ. தொலைவுக்குஒரு தடுப்பணைக் கட்ட வேண்டும்.
கரூர் மாவட்டம் தாதம்பாளையம் ஏரியை தூர்வாரி, அதில் நீர் நிரப்பிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கட்சியின் தலைவர் அ.வியனரசு செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும். கடந்த 2010- ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தாமிரவருணி-கருமேனியாறுத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 39,000 ஏரிகள், கண்மாய்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரினால் 500 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும் என்றார் அவர். கூட்டத்துக்கு மாநிலப் பொதுச் செயலர் வழக்குரைஞர் இரா.பாண்டியன் தலைமையில் வகித்தார்.
பொறியாளர் சசிக்குமார் வரவேற்றார். இதில் கட்சியின் தலைவர் அ.வியனரசு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், மாநில ஒருங்கிணைப்பாளர் நாமக்கல் அருள்மணி, அமைப்புச்செயலர் திருச்சி பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.