கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு குழந்தையுடன் இளம்பெண் வெள்ளிக்கிழமை தீக்குளிக்க முயன்றார்.
கரூர் மாவட்டம், அய்யர்மலையைச் சேர்ந்தவர் மகேசுவரன் (31). இவர் குளித்தலை உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், அய்யர்மலையில் பேக்கரி கடை நடத்தி வரும் பிச்சையிடம் ரூ.10,000 பணம் கேட்டு மிரட்டினாராம்.
இதைத் தொடர்ந்து பிச்சை மற்றும் அவரது நண்பர்களால் கடந்த 6 ஆம் தேதி மகேசுவரன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக குளித்தலை காவல் நிலையத்தில் மகேசுவரன் மனைவி சரசுவதி அளித்த புகாரின் பேரில், பிச்சை உள்ளிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் முன்பகுதிக்கு வெள்ளிக்கிழமை தனது 9 வயது மகனுடன் வந்த மகேசுவரனின் மனைவி சரசுவதி, திடீரென தான் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தன் மீதும், தன் மகன் மீது ஊற்ற முயன்றார்.
இதை கண்டு அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் இருவரையும் மீட்டு அதிகாரிகளிடம் அழைத்துச் சென்றனர். காவல்துறை அதிகாரிகளிடம் மனு அளித்து வந்த பின்னர், சரசுவதி கூறியது:
என் கணவர் கடந்த 6 ஆம் தேதி கொலை செய்யப்பட்ட நிலையில், அய்யர்மலையில் பேக்கரி கடையில் பணியாற்றி வரும் சேகர், மணி, கதிர் ஆகிய மூவரும் மிரட்டுகின்றனர். உன் கணவர் கொலை வழக்கில் 5 பேர் மீது கொடுத்துள்ள புகாரைத் திரும்பப் பெறவில்லை எனில், உன்னையும், உனது மகனையும் கொலை செய்துவிடுவோம் என மிரட்டுகின்றனர். உயிருக்குப் பாதுகாப்பில்லை. இதனால்தான் இங்குள்ள அதிகாரிகளைச் சந்தித்து மனு அளிக்க வந்தேன் என்றார்.