தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தால் வெற்றி நிச்சயம் என்றார் மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளை கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தேர்வர்கள் எளிதாக எதிர்கொள்ளும் வகையில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்தின் மூலம் தேர்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில் வரும் செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி-4 தேர்விற்கான இலவசப் பயிற்சி வகுப்பை குளித்தலை அய்யர்மலை அருகே உள்ள அரசு கலைக் கல்லூரி மற்றும் வள்ளுவர் மேலாண்மை அறிவியல் கல்லூரிகளில் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்து மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் மேலும் பேசியது:
டிஎன்பிஎஸ்சி தொகுதி-4 தேர்விற்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது உங்கள் அனைவருக்கும் கிடைத்த பெரிய வாய்ப்பாகும்.
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்க என்ற பழமொழியின்படி நீங்கள் அனைவரும் உங்களுக்கு கிடைத்திருக்கும் இந்த பொன்னான வாயப்பினை முறையாகப் பயன்படுத்திக்கொண்டு முன்னேற வேண்டும். உங்கள் எண்ணங்களையும், சிந்தனைகளையும் இலக்கை நோக்கி மட்டுமே ஒருமுகப்படுத்தி ஒரு தவவாழ்க்கை போல தேர்விற்கு இடைப்பட்ட காலத்தை நீங்கள் பயன்படுத்திக் காண்டால் உங்கள் வெற்றியை யாராலும் தடுக்க இயலாது.
மாணவிகள் அனைவரும் இந்த வகுப்பினை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தால் உங்களுக்கு வெற்றி நிச்சயம் என்றார்.
நிகழ்ச்சியில், குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் எம். லியாகத், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் க.விஜயா, குளித்தலை அரசு கலைக்கல்லூரி முதல்வர் கெளசல்யாதேவி, வள்ளுவர் மேலாண்மை அறிவியல் கல்லூரி தாளாளர் க.செங்குட்டுவன், வட்டாட்சியர்கள் செந்தில்(குளித்தலை), மகாமுனி (அரவக்குறிச்சி) உள்ளிட்ட அலுவலர்கள் பலர்
கலந்து கொண்டனர்.