கரூர் அருகே பாலத்தின் மீது கார் மோதி கவிழ்ந்த விபத்தில் 3 வயது குழந்தை உள்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மூன்று பேர் காயமடைந்தனர்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை அடுத்த செல்வநாதபுரம் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் கிளாரன்ஸ் விமல்ராஜ்(49). இவர், தனது மனைவி சுதா(35), மகன் ரியான்ஸ்(15) மற்றும் உறவினர் செபாஸ்டின் மேரி(65), ஈரோடு மாவட்டம் பவானிசாகர் கேம்ப் அருகே உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த லட்சுமணன் மனைவி பரமேஸ்வரி (60), ஜூட் விமல்ராஜ் மகன் ஆன்டணி பிளாசோ(3) ஆகியோருடன் காரில் ஞாயிற்றுக்கிழமை திருச்சிக்குச் சென்றார். பின்னர் திங்கள்கிழமை அதிகாலை திருச்சியில் இருந்து புறப்பட்டு திருப்பூர் நோக்கி காரில் வந்துகொண்டிருந்தனர். காரை விமல்ராஜ் ஓட்டி வந்துள்ளார். கரூரை அடுத்த க.பரமத்தி அருகே கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் பவித்திரம் கிராமநிர்வாக அலுவலர் அலுவலகம் அருகே கார் காலை 6.45 மணியளவில் வந்துகொண்டிருந்தபோது திடீரென நிலைத்தடுமாறி சாலையோரம் இருந்த பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதியது.
இதில் பரமேசுவரி, ஆன்டனி பிளாசோவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்த க. பரமத்தி போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து பரமேசுவரி, குழந்தை ஆண்டனி பிளாசோ ஆகியோரது உடல்களை கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் காயமடைந்த கிளாரன்ஸ் விமல்ராஜ், சுதா, ரியான்ஸ் ஆகியோரை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.