கரூர்: கல்விச் சுற்றுலாவாக மலேசியா, சிங்கப்பூர் சென்று திரும்பிய அரசுப் பள்ளி மாணவரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாராட்டினார்.
கரூர் வாங்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு பயிலும் மாணவர் ரெ. ராம்குமார். இவர், 2017-18 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலையருவி திட்டத்தின் கீழ் கலை, இலக்கியப் பிரிவுகளில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கார்ட்டூன் வரைதல் போட்டியில் முதலிடம் பிடித்தார். தொடர்ந்து நடைபெற்ற மாநில அளவிலான போட்டியிலும் முதல் பரிசை வென்றார்.
இதையடுத்து கல்வித்துறை சார்பில் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு கல்விச்சுற்றுலா ஏற்பாடு செய்ததில் தமிழகம் முழுவதும் தேர்வான 25 மாணவர்களில், கரூர் மாணவர் ரெ. ராம்குமாரும் தேர்வு செய்யப்பட்டு மலேசியா, சிங்கப்பூர் சென்றுவந்தார். இதையடுத்து மாணவரையும், அவரது வழிகாட்டி ஓவிய ஆசிரியருமான தே.ரவிகுமார், பள்ளித் தலைமை ஆசிரியர் செல்வம், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் செ.அம்மையப்பன் ஆகியோரை செவ்வாய்க்கிழமை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்
சி.முத்துக்கிருஷ்ணன் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.