அரியலூர் மாவட்டம், கயர்லாபாத்தில் இயங்கி வரும் அரசு சிமென்ட் ஆலையில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
கயர்லாபாத் கிராமத்தில் இயங்கி வரும் அரசு சிமென்ட் ஆலையில் ரூ.200 கோடி மதிப்பில் புதிதாக சிமென்ட் உற்பத்திப் பிரிவு அமைக்கப்பட்டது.இந்த உற்பத்திப் பிரிவில் புதன்கிழமை சோதனை ஓட்டம் நடைபெற்றது.
அப்போது கண்வேயர் பெல்ட்டில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த அரியலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் சிமென்ட் ஆலை தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து கயர்லாபாத் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.