கந்துவட்டிக்கொடுமையால் கரூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் இருசக்கர வாகன மெக்கானிக் புதன்கிழமை தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
ஈரோடு மாவட்டம், பள்ளிப்பாளையம் ஆர்.எஸ்.பகுதியைச் சேர்ந்தவர் அந்தோனிராஜ்(42). இவர் தற்போது கரூர் பெரியவடுகப்பட்டி பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து, மெக்கானிக்காக பணியாற்றி வந்தார்.
அதே பகுதியைச் சேர்ந்த சாரதியிடம் குடும்பச் செலவுக்காக கடந்தாண்டு ரூ.45,000-த்தை அந்தோனிராஜ் வட்டிக்கு கடன் வாங்கினாராம்.
இந்நிலையில் கடந்த வாரம் திடீரென சாரதி தான் ஊரை விட்டுச் செல்வதாகவும், அதனால் வாங்கிய பணத்தை உடனே கொடுக்குமாறு கூறியுள்ளார். தொடர்ந்து, கடந்த இரு தினங்களுக்கு முன் அந்தோனிராஜ் வீட்டுக்கு வந்த சாரதி வீட்டில் இருந்த பொருள்களை எடுத்துச் சென்றாராம்.
இதுதொடர்பாக வாங்கல் காவல்நிலையத்தில் அந்தோனிராஜ் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லையாம். இதனால் விரக்தியடைந்த அந்தோணிராஜ் புதன்கிழமை தனது மனைவி பினாமோள்(38), மகள்கள் சகாயமேரி(14), ஜெஸ்மிதாமேரி(9) ஆகியோருடன் ஆட்சியரகம் வந்து, தன் மீதும், குடும்பத்தினர் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.
உடனே அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீஸார் அவர்களை மீட்டு, விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.