கரூரில் ஜூலை மாதம் நடைபெறஉள்ள புத்தகத் திருவிழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக விழாக் குழுவினர் தெரிவித்தனர்.
கரூரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பள்ளிகல்வித்துறை, பாரதி புத்தகாலயம், மாவட்ட மைய நூலகம் சார்பில், கொங்கு மண்டபத்தில் மூன்றாவது புத்தகத்திருவிழா ஜூலை 19-மதேதி முதல் 28-ஆம்தேதி வரை நடைபெற உள்ளது. இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் கரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், புத்தகத்திருவிழாவின் தலைவராக தீபம் உ.சங்கர், கௌரவத்தலைவராக ப.தங்கராசு, செயலராக ஐ.ஜான்பாஷா, பொருளாளராக மு.சுப்ரமணியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து நிர்வாகிகள் கூறியது: கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்ததைவிட நிகழாண்டில் சிறப்பாக இந்த புத்தகத் திருவிழாவை நடத்த உள்ளோம்.விழாவில் பங்கேற்பவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்து 10 பேருக்கு ரூ.500 மதிப்பிலான புத்தகங்கள் வழங்கப்படும். மேலும் மாணவர்களுக்கு கோளரங்கம், டெலஸ்கோப் மூலம் வான் நோக்குதல் நிகழ்ச்சிகள் தலைசிறந்த விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் செய்யும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவற்றைத்தவிர காலை, மாலை நேரங்களில் கலைநிகழ்ச்சிகள், தலைசிறந்த பேச்சாளர்களின் பேச்சும் நடைபெறும். மாணவர்களுக்கு திறனாய்வுத் தேர்வு நடத்தி அவர்களுக்கு சான்றிதழ், புத்தக பரிசு, கேடயம் வழங்கப்பட உள்ளது என்றனர்.
கூட்டத்தில் புத்தக திருவிழா தலைவர் தீபம் உ.சங்கர், கௌரவத்தலைவர் ப.தங்கராசு, செயலர் ஐ.ஜான்பாஷா, பொருளாளர் மு.சுப்ரமணியன், திருக்குறள்பேரவைச் செயலர் மேலை.பழநியப்பன், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு, ரோட்டரி பாஸ்கர், கிரஸன்ட் பள்ளியின் சாகுல்அமீது, ஆரா.ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.