கரூர் மாவட்டம், தோகைமலை அருகே வடசேரியில் சிறப்பு தணிக்கை கிராம சபை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தோகைமலை அருகே வடசேரி ஊராட்சியில் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பணிகள் மற்றும் பணியாளர்கள் செய்த பணிகள் குறித்து சமூக தணிக்கை இறுதிசெய்தல் குறித்து சிறப்பு கிராமசபை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காவல்காரன்பட்டியில் உள்ள சமுதாயக்கூடம் அருகே மரத்தடியில் நடந்த இக்கூட்டத்திற்கு மூத்த குடிமகன் பழனியப்பன் தலைமை வகித்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உஷா, இளநிலை உதவியாளர் பாலசுப்ரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் 2018-19 ம் ஆண்டிற்கான முதல் அரையாண்டில் வடசேரி ஊராட்சியில் 100 நாள் பணியாளர்களின் பணி விவரங்கள், மொத்த செலவினங்கள் மற்றும் பணியாளர்களின் ஊதியத்தின் விவரங்கள் என சமூக தணிக்கையாளர்களைக் கொண்டு கடந்த வாரம் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு அறிக்கைகளை கிராம சபையில் ஒப்புதல் பெற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் புதிய பணிகளில் மரக்கன்றுகள் நடுதல், குளங்கள் மற்றும் வாரிகளை தூர்வாருதல், சாலையோரம் பராமரிப்பு உள்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் நீர்மேலாண்மை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.