சுதந்திர தின விழா கோலாகலம்: 165 பேருக்கு ரூ.1.38 கோடியில் உதவி

கரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் தேசியக் கொடியேற்றி வைத்து 165 பயனாளிகளுக்கு

கரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் தேசியக் கொடியேற்றி வைத்து 165 பயனாளிகளுக்கு ரூ.1.38 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன்.
கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆர். பாண்டியராஜன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் தேசியக்கொடியேற்றி வைத்து காவல் துறையின் அணிவகுப்பு மரியாதை மற்றும் தேசிய மாணவர் படை, நாட்டுநலப்பணித்திட்டம், பாரத சாரண, சாரணியர் இயக்கம், இளையோர் செஞ்சிலுவை சங்க அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். 
பின்னர் சமாதானப் புறாக்களையும், தேசியக்கொடி வண்ண பலூன்களையும் பறக்கவிட்டார்.
தொடர்ந்து சுதந்திரப் போராட்டத் தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு பொன்னாடை அணிவித்து கெளரவித்தார்.  
இதையடுத்து வருவாய்த் துறை சார்பில் 26 பேருக்கு ரூ. 3.10 லட்சத்திலான விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களையும், முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ஒருவருக்கு ரூ. 4 லட்சம் நிதியுதவி, சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் திருமண உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் 97 பயனாளிகளுக்கு ரூ. 1.16 கோடியிலான நலத்திட்ட உதவி என பல்வேறு நலத் திட்டங்களின் கீழ் மொத்தம் 165 பேருக்கு ரூ. 1.38 கோடியிலான நலத் திட்டங்களை வழங்கினார். 
பின்னர் சிறப்பாகப் பணிபுரிந்த அரசுத் துறை அலுவலர்கள், காவல் துறையினர்  மற்றும் ஊர்க்காவல் படையினருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.தொடர்ந்து அரசு இசைப்பள்ளி, கரூர் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் ச. சூர்யபிரகாஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் எஸ். கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)செல்வசுரபி, வருவாய்க் கோட்டாட்சியர்கள் சந்தியா (கரூர்), லியாகத் (குளித்தலை), உதவி ஆணையர் (கலால்) மீனாட்சி, ஆதிதிராவிடர் நல அலுவலர் லீலாவதி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ராஜேந்திரன், முதன்மைக் கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com