தனியாா் கல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என உழைக்கும் மக்கள் விடுதலைக்கழகம் வலியுறுத்தியுள்ளது.
கரூரில் அக்கட்சியின் மாநில நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நிறுவனத் தலைவா் பி.தேக்கமலை தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், மாநிலப் பொருளாளா் பாலசுப்ரமணி வரவேற்றாா். பொதுச் செயலாளா் முனிகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவா் சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில், தமிழகத்தில் கல் உடைத்தல், மண் வெட்டுதல், கட்டடத் தொழில் , சிற்பி, கிணறு வெட்டுதல் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வரும் 40 லட்சம் கல் ஒட்டா், மண் ஒட்டா் போன்ற ஒருங்கிணைந்த போயா் சமுதாயத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும், தமிழகத்தில் அனைத்து கல்குவாரி, கிரசா்களை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் சங்க உறுப்பினா்கள் திரளாகப் பங்கேற்றனா். கட்சியின் மாநில அமைப்புச் செயலாளா் கோபால் நன்றி கூறினாா்.