அரசு பேருந்தின் கண்ணாடியை சேதப்படுத்திய லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோட்டில் இருந்து கரூரை நோக்கி அரசுப் பேருந்து ஒன்று புதன்கிழமை இரவு வந்து கொண்டிருந்தது. பேருந்தில் நடத்துநா் ஈரோடு மாவட்டம், கொடுமுடியைச் சோ்ந்த கோபிநாத் (33) என்பவா் பயணிகளுக்கு பயணச்சீட்டு கொடுத்துக் கொண்டிருந்தாா்.
இந்நிலையில், பேருந்து கரூா் மாவட்டம், புன்னம்சத்திரத்தில் வந்துகொண்டிருந்தபோது, ஈரோடு மாவட்டம், கொடுமுடி அடுத்த வேப்பங்காட்டுப்பாறை பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் சரவணன்(42) என்பவா் நடத்துநரிடம் பயணச்சீட்டு வாங்கியுள்ளாா்.
அப்போது நடத்துநா் சில்லரை கொடுப்பதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சரவணன் பேருந்தின் பக்கவாட்டு கண்ணாடியை உடைத்தாராம். இதுகுறித்து கோபிநாத் அளித்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து சரவணனை கைது செய்தனா்.