குடிநீரை பொதுமக்கள் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூர் மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் பருவக்கால வறட்சியால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. எனவே பொதுமக்கள் குடிநீரை தேவைக்குத் தகுந்த படி சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். குடிநீர்ப் பிரச்னை தொடர்பான புகார்களைப் பெற்று நடவடிக்கை மேற்கொள்ள, மாவட்ட ஆட்சியரகத்தில் குடிநீர் விநியோகம் தொடர்பான கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பாட்டில் இருந்து வருகிறது. பொதுமக்கள் குடிநீர்ப் பிரச்னைகள் தொடர்பான புகார்களை 1800 425 5104, 04324-255104 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.