கரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் நுண்ணீர்ப் பாசனத் திட்டம் அமைக்க விவசாயிகளுக்கு ரூ.2.61 லட்சம் மானியத் தொகை வழங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியரக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியர் த. அன்பழகன் தலைமை வகித்தார். முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை. வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் அளித்த 342 மனுக்களைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர், அதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
மேலும், பொதுமக்களிடமிருந்து பல்வேறு முகாம்கள் மூலமாக பெறப்படும் மனுக்கள் மீது எந்தவித காலதாமதம் செய்யாமல், உரிய விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளையும் அவர் அறிவுறுத்தினார்.
மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மூலமாக, கூடுதலாக நீர் மேலாண்மைச் செயல்பாடுகள் திட்டத்தின் கீழ் நுண்ணீர் பாசனத் திட்டம் அமைக்க அரவக்குறிச்சி, குளித்தலை, நங்கவரம், சின்னதாராபுரம் பகுதிகளைச் சேர்ந்த 5 விவசாயிகளுக்கு ரூ.2.61லட்சத்தை கூடுதல் மானியத் தொகையாக ஆட்சியர் த. அன்பழகன் வழங்கினார். தனித்துணை ஆட்சியர் கே.மீனாட்சி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கணேஷ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் லீலாவதி உள்ளிட்ட பல்துறை அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.