சர்வதேச அளவில் உலகத் திறனாய்வாளர்களைக் கண்டறியும் திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான தடகளப்போட்டிகள் கரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கரூர் மாவட்ட விளையாட்டுப் பிரிவின் சார்பில் 2018-2019 -ம் ஆண்டிற்கான உலகத் திறனாய்வுத் திட்டத்தின் கீழ் கல்வி மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் 6,7,8-ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்றன.
போட்டியில் கரூர் மாவட்டத்தில் இருந்து அரசு மற்றும் அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் இருந்து 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
போட்டிகளை நகர துணைக் காவல் கண்காணிப்பாளர் ம. கும்மராஜா தொடக்கி வைத்தார். இதில் மாணவ,மாணவிகளுக்கு 100மீ, 200மீ., 400மீ. ஓட்டம் மற்றும் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.