பாதிக்கப்பட்ட மகளிருக்கு உதவிபுரியும் மையத்தில் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மகளிரு க்கு உதவிபுரியும் மையத்திற்கு பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரூர் மாவட்டத்தில் வன்கொடுமையால் பாதிக்கப்படும் மகளிருக்கு மருத்துவ வசதி அளித்தல், சட்டபூர்வ நடவடிக்கைக்கு உதவி செய்தல் மற்றும் மன ரீதியான ஆலோசனைகள் வழங்குவதற்காக மத்திய அரசால் சக்தி என்னும் திட்டத்தின் கீழ் ஒன்ஸ்டாப் சென்டர் எனும் மையம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இம்மையத்துக்கு நிர்வகிப்பவர், வழக்குப் பணியாளர், தகவல் தொழில்நுட்ப பணியாளர், பல்நோக்கு உதவியாளர் பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் தங்களது சுய விபரங்களை தட்டச்சு செய்து, வரும் மார்ச் 1-க்குள் மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட ஆட்சியரகம், கரூர் என்னும் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
குறிப்பிட்ட காலக்கெடுவிற்குபின் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு, ஆட்சியரக வளாகத்திலுள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தை நேரில் அணுகலாம். இதில் நிர்வகிப்பவர் பதவிக்கு முதுநிலை சட்டப்படிப்பும், பெண் வன்கொடுமை தொடர்பாக 5 ஆண்டுகள் பணியாற்றிய முன் அனுபவமும் இருக்க வேண்டும்.
வழக்குப்பணியாளர் பணிக்கு முதுநிலை சட்டப்படிப்பு மற்றும் வன்கொடுமை தொடர்பாக 3 ஆண்டு பணிபுரிந்த முன் அனுபவம் வேண்டும். தகவல் தொழில் நுட்ப பணியாளர் பணிக்கு இளநிலை பட்டயப்படிப்புடன் கணிணி பட்டயப்படிப்பில் மூன்றாண்டு அனுபவம் இருக்க வேண்டும். பல்நோக்கு உதவியாளர் பணிக்கு, மூன்றாண்டு அனுபவம் மட்டும் தேவை என தெரிவித்துள்ளார்.