தமிழகத்தில் பூரண மதுவிலக்கு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என உழைப்பாளி மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
வரும் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கரூரில் அக்கட்சியின் மாநில கலந்தாய்வுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை கட்சியின் நிறுவனர் தலைவர் ராமகோபாலதண்டாள்வர் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்டத் தலைவர் தேக்கமலை முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலர் பி. வெங்கடேசன், துணைத் தலைவர் பரந்தாமன், துணைச் செயலர் சிவசுப்ரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் வரும் மக்களவைத் தேர்தலில் அமமுக கூட்டணியில் திருப்பூர், கிருஷ்ணகிரி தொகுதிகளில் போட்டியிடுவது, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு உடனடியாக அமல்படுத்த வேண்டும், அரசு கட்டுமானத் துறைக்கு என தனித்துறை ஏற்படுத்த வேண்டும். கல்வியிலும், பொருளாதாரத்திலும் மிகவும் பின்தங்கியுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒட்டர், போயர்நாயக்கர் சமுதாயத்தினருக்கு வேலைவாய்ப்பிலும், கல்வியிலும் 5 சதவீத தனி உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். கல்லுடைக்கும் தொழிலாளர் நலவாரியம், போயர் நலவாரியம் உடனே அமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. போயர் பேரவை மாநில துணைச் செயலர் ரவி வரவேற்றார்.