கரூர் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறவிருந்த (ஜன.12) பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் ஜனவரி 19 ஆம் தேதியன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
உணவுப் பொருள் வழங்கல் தொடர்பான பொதுமக்களின் குறைகளைக் களையும் வகையில் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மேலப்பாளையம், வதியம், தெற்கு சிவாயம், கொசூர், தாளப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களிலும், ஐ. ஆலமரத்துப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் சனிக்கிழமை ( ஜன.12) பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக ஒவ்வொரு வட்டத்துக்கும் ஒரு அலுவலர் மேற்பார்வையாளர் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், தமிழக அரசு உத்தரவின்படி, பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் வழங்கும் பணி நியாயவிலைக் கடைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான பணிகளில் அலுவலர்கள் முதல் பணியாளர்கள் வரை ஈடுபட்டுள்ளனர்.
எனவே, கரூர் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த அதே பகுதிகளில், பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் ஜனவரி 19 ஆம் தேதி நடைபெறும். எனவே இக்கூட்டங்களில் சம்பந்தப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.