புகையில்லா போகிப்பண்டிகை கொண்டாட பொதுமக்களுக்கு கரூர் மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருள்களை எரித்து, பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகிப் பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர்.
ஆனால் தற்பொழுது போகிப் பண்டிகையின் போது பழைய பொருள்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருள்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது.
மேலும் புகையில் இருந்து வெளியேறும் நச்சு வாயுக்களால் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொது மக்களுக்கு பாதிப்பும் ஏற்படுகிறது.
வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுவதோடு, விபத்துகள் ஏற்படுவதற்கும் காரணமாக அமைகிறது. மேலும், விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது.
எனவே, போகிப்பண்டிகையின் போது பழைய பொருள்களை எரிப்பதை தவிர்த்து, காற்றின் தரத்தை பாதுகாக்க பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும். புகையில்லா போகிப்பண்டிகை கொண்டாடி, சுற்றுச்சூழலை பேணிக் காக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.