அரவக்குறிச்சி ஒன்றியத்துக்குட்பட்ட தெத்துப்பட்டி, லிங்கமநாயக்கன்பட்டி ஊராட்சிகளில் திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
4-வது நாளாக நடைபெற்ற கூட்டங்களுக்கு அரவக்குறிச்சி ஒன்றியச் செயலர் எம்.எஸ். மணியன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் நன்னியூர்ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
இதில் பொதுமக்கள் தெருவிளக்கு வசதி, கழிவுநீர் வாய்க்கால் வசதி, கால்நடை மருந்தகம், சமுதாயக்கூடம், குடிநீர் பிரச்னை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை விடுத்தனர். இதைக் கேட்டுக்கொண்ட முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, விரைவில் தமிழகத்தில் திமுக ஆட்சி அமையும். உங்களின் அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றித் தரப்படும் என உறுதி அளித்தார். கூட்டத்தில் மாவட்டத் துணைச் செயலர் மகேஸ்வரிசுப்ரமணி, மகளிரணி செயலர் கலாவதி சக்திவேல், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளவரசு உள்ளிட்ட கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.