கரூர் மாவட்டம், ஈசநத்தம், சின்னதாராபுரத்தில் திமுக சார்பில் நடைபெறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஊராட்சி சபைக் கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார். ஈசநத்தம் ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கும், சின்னதாராபுரத்தில் முற்பகல் 11.30 மணிக்கும் நடைபெறும் ஊராட்சி சபைக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார்.
இதைத் தொடர்ந்து, அண்மையில் உடல்நலக் குறைவால் காலமான திமுகவின் நெசவாளர் அணித் தலைவர் பரமத்தி சண்முகம் இல்லம் அமைந்துள்ள கரூர் வேலம்மாள் லே அவுட் பகுதிக்குச் செல்லும் ஸ்டாலின், அங்கு அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
இதன் பின்னர், நொய்யல் பகுதியில் 5000 வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்றும் கூட்டத்தில் பங்கேற்று, தேர்தலின் போது மேற்கொள்ள வேண்டிய ஆலோசனைகளை வழங்கிப் பேசுகிறார். இந்த நிகழ்வுகளில், கரூர் மாவட்ட திமுக செயலர் நன்னியூர் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர்கள் ம.சின்னசாமி, வி.செந்தில்பாலாஜி, முன்னாள் மக்களவை உறுப்பினர் கே.சி.பழனிசாமி உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்கின்றனர்.