தைப்பூசத்தையொட்டி குளித்தலையில் 8 ஊர் சுவாமிகள் சந்திப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.
கரூர் மாவட்டம், குளித்தலை காவிரியாற்று கடம்பன்துறையில் தைப்பூசத்திருவிழா பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த திருவிழாவுக்காக குளித்தலை அருள்மிகு முற்றிலாமுலையம்மை உடனுறை கடம்பவனேசுவரர், ராஜேந்திரம் தேவநாயகி உடனுறை மத்யார்ஜுனேசுவரர், பேட்டவாய்த்தலை பாலாம்பிகை உடனுறை மத்யார்ஜுனேசுவரர், அய்யர்மலை கரும்பார்குழலி உடனுறை ரத்தினகிரீசுவரர், திருஈங்கோய்மலை மரகதாம்பாள் உடனுறை மரகதாரேசுவரர், முசிறி கற்பூரவள்ளி உடனுறை சந்திரமவுலீசுவரர், வெள்ளூர் சிவசாமி உடனுறை திருக்காமேசுவரர் , கருப்பத்தூர் சுகந்தகுந்தாளாம்பிகை உடனுறை சிம்மபுரீசுவரர் ஆகிய 8 ஊர்களிலுள்ள திருக்கோயில்களிலிருந்து சுவாமிகள் திங்கள்கிழமை மாலை குளித்தலை கடம்பன்துறைக்கு புறப்பாடாகி வந்து சேர்ந்தன. அங்கு சுவாமிகள் சந்திப்பு நிகழ்ச்சிநடைபெற்றது. தொடர்ந்து இரவில் காவிரியாற்றில் தீர்த்தவாரி உற்ஸவமும் நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை காலை 8 ஊர் சுவாமிகள் கடன்பன்துறையிலிருந்து தத்தம் கோயில்களுக்குப் புறப்பட்டுச் செல்லுதல் நடைபெறும்.