பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு அரசு அலுவலர் கழகம் வலியுறுத்தியுள்ளது.
கரூரில் தமிழ்நாடு அரசு அலுவலர் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் மாவட்டத்தலைவர் மு.நீலகண்டன் தலைமையில் அண்மையில்(ஜூன் 29) நடைபெற்றது.
மாவட்ட துணைத்தலைவர் விமலாதித்தன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஜே.விஜய்ஆனந்த் வரவேற்றார். கூட்டத்தில் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களைக் கழகத்தில் உறுப்பினர்களாகச் சேர்ப்பது, அரசுத் துறைகளில் காலியாக உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கேட்டுக்கொள்வது, கரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் என்ஜிஜிஓ வார்டு தனியாக ஏற்படுத்தி, தனி மருத்துவர் நியமனம் செய்யவும், அரசு ஊழியர்களின் குறைகளை ஆட்சியரிடம் தெரிவிப்பதற்கு, கூட்டுமன்றக் குழு கூட்டத்தைக் கூட்டுவது, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர தமிழக அரசைக் கேட்டுக்கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாவட்டப் பொருளாளர் பிச்சைமுத்து, அமைப்புச் செயலாளர் ரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.