கரூர் வெங்கமேட்டை அடுத்த காதப்பாறை காமராஜ் நகரைச் சேர்ந்த நடராஜ் மகன் சின்னதுரை(36). வெல்டிங் தொழிலாளி. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சசி மகன் மனோஜ்குமார்(25), மாணிக்கம் மகன் ஸ்ரீதர்(18) ஆகியோர் செவ்வாய்க்கிழமை காலை அதே பகுதியில் தங்கி ஜவுளி நிறுவனத்தில் வேலைபார்க்கும் மேற்குவங்க மாநில இளம்பெண்ணை கிண்டல் செய்துள்ளனர்.
அப்போது, சின்னதுரையின் அக்கா மீனா(50) அவர்களைத் தட்டிக் கேட்டதற்கு, அவரையும் அவர்கள் இருவரும் தகாத வார்த்தையால் திட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சின்னதுரை, ராமேஸ்வரபட்டிக்காரர் தோட்டம் அருகே நின்றுகொண்டிருந்த மனோஜ்குமார், ஸ்ரீதரிடம் இதுகுறித்து கேட்டபோது ஏற்பட்ட தகராறில் மனோஜ்குமாரும், ஸ்ரீதரும் சேர்ந்து அரிவாளால் சின்னதுரையை வெட்டிவிட்டு ஓடிவிட்டனர். இதில் சின்னதுரை சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த வெங்கமேடு போலீஸார் வழக்குப்பதிந்து தப்பி ஓடிய மனோஜ்குமார், ஸ்ரீதர் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.