ஆஷாட ஏகாதசியையொட்டி கரூர் பண்டரிநாதன் பஜனை மடத்தில் கருவறையிலுள்ள மூலவரை பக்தர்கள் தொட்டு வணங்கினர்.
கரூர் ஜவஹர்பஜார் பகுதியிலுள்ள இந்த மடத்தில் ஆஷாட ஏகாதசி நாளில் மூலவரை கருவறைக்குள் சென்று பக்தர்கள் தொட்டு வழிபடும் நிகழ்ச்சி நடைபெறும்.
நிகழாண்டு ஆஷாட ஏகாதசி விழா வியாழக்கிழமை மாலை துக்காராம் கொடி புறப்பாடுடன் தொடங்கியது. தொடர்ந்து வெள்ளிக்கிழமை ஆஷாட ஏகாதசியையொட்டி, காலை 6.30 மணியளவில் ரகுமாய் சமேத பண்டரிநாதருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. அதனை தொடர்ந்து "பாதுகை சேவை" எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பண்டரிநாதருக்கு துளசி மாலையை அணிவித்து, கருவறையில் சென்று பாதம் தொட்டு மனமுருகி வணங்கிச் சென்றனர்.
வெளி மண்டபத்தில் உற்சவர் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து மாலை 6.30 மணியளவில் சாமி புறப்பாடு நடந்தது. இதில் சுவாமி வீதியுலா வந்தார்.
கரூர் நகர், செங்குந்தபுரம், திருமாநிலையூர், வெங்கமேடு, வடக்கு பிரதட்சணம் சாலை பசுபதிபாளையம், செல்லாண்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பலர் ஆஷாட ஏகாதசி விழாவில் பங்கேற்றனர்.
சனிக்கிழமை காலை 6 மணியளவில் சாமிக்கு காவிரியாற்றில் தீர்த்தவாரியும், மாலையில் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், சிறப்புப் பூஜையும் நடைபெறுகிறது.