கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செவிலியர்கள் 4 பேர் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செவிலியர்கள் செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்கள் 140-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு செவிலியர் அல்லாத பணிகளை மருத்துவக்கல்லூரி டீன் தருவதாகக்கூறி, தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்க மாநில துணைத் தலைவர் நல்லம்மாள் தலைமையில் செவிலியர்கள் கடந்த 5 ஆம் தேதி பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தமிழ்நாடு அரசு பணியாளர் நன்னடத்தை விதிகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், அரசுக்கும், மருத்துவமனைக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் கூறி, அரசு செவிலியர்கள் சங்க மாநில துணை தலைவர் நல்லம்மாள், மாவட்டத் தலைவர் கார்த்திக், செயலாளர் செல்வராணி, பொருளாளர் தனலட்சுமி ஆகிய 4 பேரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் ரோஸி வெண்ணிலா பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதைக் கண்டித்து, செவ்வாய்க்கிழமை காலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் அலுவலகம் முன்பு அரசு மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகர காவல் துணைக் கண்காணிப்பாளர் கும்மராஜா அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவர்கள் உடன்படாததால் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.