வரும் 18 ஆம் தேதி முதல் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் ஜமா பந்தி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரூர் மாவட்டத்தில் 1428 -ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய்த் தீர்வாயம் எனும் ஜமாபந்தி வரும்18, 19, 20, 21, 25 ஆம் தேதிகளில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் மண்மங்கலம் வட்டத்திலும், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் கடவூர் வட்டத்திலும், கரூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் கரூர் வட்டத்திலும், குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் குளித்தலை வட்டத்திலும், அரவக்குறிச்சி வட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையிலும், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தலைமையில் புகளூர் வட்டத்திலும், உதவி ஆணையர்(கலால்) தலைமையில் கிருஷ்ணராயபுரம் வட்டத்திலும், அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் வருவாய்த் தீர்வாயம் எனும் ஜமாபந்தி நடக்கிறது. பொதுமக்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை சம்மந்தப்பட்ட வருவாய்த் தீர்வாய அலுவலர்களிடம் விண்ணப்பித்து தீர்வு கண்டுகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.