கரூர்: உப்பிடமங்கலம் மின் வாரிய அலுவலகம் தற்காலிகமாக புலியூர் துணை மின் வளாகத்தில் புதன்கிழமை முதல் செயல்படும் எனத் தெரிவித்துள்ளார் கரூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் சு.செந்தாமரை.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூர் மின்வாரிய கோட்டத்திற்குட்பட்ட உப்பிடமங்கலம் மின்வாரிய அலுவலகம் கடந்த பல ஆண்டுகளாக உப்பிடமங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட வடக்கு கேட் முகவரியில் செயல்பட்டு வந்தது.
தற்போது உப்பிடமங்கலம் மின்வாரிய பிரிவு அலுவலகத்திற்கு வெண்ணைமலை அருகே புதியதாக தொடங்கப்பட்ட உப்பிடமங்கலம் துணை மின் நிலைய வளாகத்தில் புதிய கட்டடம் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட உள்ளது. இதனால் நிர்வாக பணிக்காக தற்காலிகமாக உப்பிடமங்கலம் மின்வாரிய அலுவலகம் மற்றும் மின்கட்டண வசூல் மையம் புலியூர் துணை மின் நிலைய வளாகத்தில் புதன்கிழமை (ஜூன் 19)முதல் செயல்படும் எனத் தெரிவித்துள்ளார்.