பறக்கும்படையினரால் பறிமுதல் செய்யப்படும் பொருள், பணத்துக்குரிய ஆவணங்களைக் காண்பித்து திரும்பப் பெற்றுச் செல்லலாம் எனத் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான த. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மக்களவைப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த 10 ஆம் தேதி இரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. தேர்தல் நடைமுறைகள் அமலில் உள்ள காலத்தில் தேர்தல் முறைகேடுகளுக்கு பயன்படுத்துவதற்காக பணம் மற்றும் பொருட்களை எடுத்துச் செல்வதைக் கண்காணித்து தடுப்பதற்காக கரூர் மாவட்டத்தில், 24 மணி நேரமும் செயல்படக்கூடிய பறக்கும்படை குழுக்கள், நிலையாக நின்று ஆய்வு செய்யும் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தேர்தல் ஆணைய அறிவுரைகளின்படி முறையான ஆவணங்களின்றி ரூ.50,000-க்கு மேல் எடுத்துச்செல்லப்படும் தொகை மற்றும் பொருள்கள் கைப்பற்றப்பட்டு வருகிறது.
கைப்பற்றப்படும் தொகைக்குரிய ஆவணங்கள் அச்சமயத்தில் இல்லாதிருக்கும் பட்சத்திலும் கைப்பற்றும் தொகையானது தேர்தல் முறைகேடுகளுக்கு பயன்படுத்தப்படவில்லை என நிரூபிக்கும் வகையிலான ஆவணங்களை, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் தினந்தோறும் பிற்பகல் 4 மணியளவில் கூடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட அலுவலர், மாவட்ட கரூவூல அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்
(கணக்குகள்) ஆகியோர் அடங்கிய குழு முன்பாக ஆஜராகி, சமர்ப்பித்து கைப்பற்றப்பட்ட தொகை, பொருட்களை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.