வரும் மக்களவை பொதுத்தேர்தலில் எந்த ஒரு வாக்காளரும் விடுபடாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி கரூர் உழவர் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலரும், துணை தேர்தல் நடத்தும் அலுவலருமான ச.சூர்யபிரகாஷ் பங்கேற்று பொதுமக்களிடம் துண்டுப்பிரசுரங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியின்போது 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் நடைபெறவுள்ள மக்களவை பொதுத்தேர்தலில் தங்களது வாக்கினை பதிவு செய்து ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும், இந்தத் தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முதன்முறையாக பயன்படுத்தப்படவுள்ள விவிபாட் எனும் வாக்காளர் வாக்குப்பதிவு தணிக்கை இயந்திரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்கள், இளம்வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
மேலும், அங்கிருந்த ஆட்டோக்கள், ஏடிஎம் மையங்கள், உழவர் சந்தை கடைகள் என அனைத்துப் பகுதிகளிலும் தேர்தல் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை மாவட்ட வருவாய் அலுவலரும், துணை தேர்தல் நடத்தும் அலுவலருமானச.சூர்யபிரகாஷ் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நிகழ்வின்போது வட்டாட்சியர்கள் பிரபு(கரூர்), ரவிக்குமார்(மண்மங்கலம்) உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.