கரூரில் அனுமதியின்றி பல்வேறு இடங்களில் மணல் கடத்திவந்ததாக 5 லாரிகளை திங்கள்கிழமை கோட்டாட்சியர் கு.சரவணமூர்த்தி பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட லாரிகளின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீதும் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
கரூர் கோட்டாட்சியர் கு. சரவணமூர்த்திக்கு கிடைத்த தகவலின் பேரில் மண்மங்கலம் வட்டாரத்துக்கு உட்பட்ட நெரூர், மின்னாம்பள்ளி ஆகிய பகுதிகளில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த இரு லாரிகளை ஆய்வு செய்தபோது உரிய ஆவணம் இல்லாமலும், அனுமதி இல்லாமலும் மணல் ஏற்றி வந்திருப்பது தெரியவந்தது. இதே போல் புகளூர், காருடையாம்பாளையம் பகுதியில் வந்த 3 லாரிகளிடமும் போதுமான ஆவணங்கள் இல்லை. இதைத் தொடர்ந்து 5 லாரிகளையும் கோட்டாட்சியர் பறிமுதல் செய்தார்.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஓட்டி வந்த ஓட்டுநர்கள் மீதும், சம்பந்தப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் மீதும் காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட 5 லாரிகளிலிருந்து சுமார் ரூ.2 லட்சம் மதிக்கத்தக்க 20 யூனிட் மணல்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.