நெரூர் காவிரியாற்றில் மூழ்கி வங்கி ஊழியர் இறந்தார். மாயமான அவரது நண்பரைத் தேடுகின்றனர்.
கரூர் தாந்தோன்றிமலை முருகன்கோவில் பின்புற பகுதியைச் சேர்ந்த மாவட்ட காங். துணைத் தலைவர் சின்னையன் மகன் சூர்யபிரகதீஷ் (23). இவர் ராயனூரில் உள்ள வங்கியின் ஊழியர்.
தாந்தோணிமலை கணபதிபாளையத்தைச் சேர்ந்த சக்திவேல் மகன் கார்த்திக்ராஜா (19), அப்துல் அலி மகன் அக்பர் உசேன்(20) ஆகிய இருவரும் மதுரை சேலம் பைபாஸ் சாலையில் உள்ள கல்லூரியில் பிகாம் இரண்டாமாண்டு மாணவர்கள். நண்பர்களான மூவரும் புதன்கிழமை பிற்பகல் நெரூர் புதுப்பாளையம் காவிரி ஆற்றுக்குச் சென்றுள்ளனர். அங்கு சூர்யபிரகதீசும், கார்த்திக்ராஜாவும் ஆற்றில் இறங்கி குளித்தனர். அக்பர்உசேன் ஷாம்பு வாங்க நெரூரில் உள்ள கடைக்குச் சென்று திரும்பி வந்து பார்த்தபோது இருவரையும் காணவில்லை. உடனே அங்கிருந்த பொதுமக்களிடம் கூற, அவர்கள் ஆற்றில் இறங்கித் தேடினர். ஆனால் அவர்களைக் கண்டுபிடிக்க முடியாததால் கரூர் தீயணைப்பு நிலையத்திற்கும், வாங்கல் போலீஸாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சென்று தேடியதில் சூர்யபிரகதீஷ் உடல் மட்டும் கிடைத்தது. இதையடுத்து உடலை கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கார்த்திக்ராஜாவை தேடுகின்றனர். வாங்கல் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.