கரூர் மேட்டுத்தெருவில் நகர கூட்டுறவு வங்கிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
கரூர் நகராட்சிக்கு உள்பட்ட மேட்டுத்தெருவில் நூற்றாண்டு பழமைவாய்ந்த நகரக்கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கிக்கு ரூ.40 லட்சம் மதிப்பில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜை விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் தலைமையில் பூமிபூஜை விழாவினை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.
மேலும், கரூர் நகர கூட்டுறவு வங்கியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கான பாதுகாப்பு பெட்டகங்களின் (லாக்கர்) சாவிகளை சம்மந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அமைச்சர் வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து தாந்தோணிமலை கல்யாண வெங்கட்ரமணசுவாமி திருக்கோயிலில் தமிழக அரசின் சார்பில் ரூ.38.78லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூடத்தையும், ரூ.7.30லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள முடிகாணிக்கையளிக்கும் அரங்கினையும், தனியார் பங்களிப்பின் மூலம் ரூ.9.45லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் கூடத்தையும் அமைச்சர் திறந்துவைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.இராஜேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.கவிதா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சீனிவாசன், நகர கூட்டுறவு வங்கித்தலைவர் எஸ்.திருவிகா, கரூர் மொத்த கூட்டுறவு பண்டகசாலையின் தலைவர் வை.நெடுஞ்செழியன், இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் என்.சுரேஷ், தொலைபேசி ஆலோசனைக்குழு உறுப்பினர் பசுவை சிவசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.