மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 56 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் வழிகாட்டு மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமில் கோவை எவர்கிரீன், சென்னை டிவிஎஸ், திருச்சி மகேந்திரா, இந்துஸ்தான், தமிழ்நாடு பிசினஸ் கார்ப்பரேஷன் போன்ற நிறுவனங்கள் பங்கேற்று ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் மற்றும் முதுகலை பட்டம் பெற்ற சிஎன்சி ஆப்ரேட்டர், கணினி இயக்குபவர் உள்ளிட்ட பணிகளுக்கும், மேலாளர், டெவலப்மெண்ட் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்களுக்கும் தேர்வு நடைபெற்றது. இம்முகாமில் 4 மாற்றுத்திறனாளிகள் உள்பட 324 பேர் பங்கேற்றனர்.
இதில் மொத்தம் 56 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பணி நியமன ஆணையை கரூர் வருவாய் கோட்டாட்சியர் சந்தியா வழங்கினார். முகாமில் கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் விஜயா, கரூர் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் மாரீஸ்வரன், கரூர் மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் மு.சுப்புலட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.