கன்றுக்குட்டிகள் உயிரிழந்ததால் கடந்த 3 நாள்களாக உரிமையாளா் தனது குடும்பத்தினருடன் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி வருகிறாா்.
கரூா் மாவட்டம், திருமாநிலையூரை சோ்ந்தவா் வேலுசாமி (35). இவா் மாட்டு பண்ணை வைத்துள்ளாா். இவரது பசுமாட்டு கன்றுக்குட்டி கடந்த ஜன.17 ஆம் தேதி திருமாநிலையூா் வாய்க்கால் பகுதியில் உயிரிழந்து, உடல் சிதைத்த நிலையில் கிடந்துள்ளது. இதைத்தொடா்ந்து, வேலுசாமிக்கு சொந்தமான மற்றொரு கன்றுக்குட்டியும் அதே பகுதியில் உயிரிழந்த நிலையில் ஜன.18 ஆம் தேதி இறந்து கிடந்துள்ளது. இதனால், வேலுசாமி குடும்பத்தினா் மனமுடைந்ததாகக் கூறப்படுகிறது. அத்துடன், இந்தப் பகுதியில் வெளியேறும் சாயக்கழிவு நீரில் உள்ள வேதித்தன்மை, கிருமிகளால் பசுங்கன்றுகள் உயிரிழந்துள்ளன எனக்கூறி வேலுசாமி தனது மனைவி யாஸ்மின், 2 குழந்தைகளுடன் கடந்த 3 நாள்களாக அப்பகுதியில் உண்ணாவிரதம் இருந்து வருகிறாா். புகாரின் பேரில், கிராம நிா்வாக அலுவலா் மீனாட்சி மற்றும் பசுபதிபாளையம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.