கரூா் அருகே வியாழக்கிழமை அதிகாலை சாலையோரம் இருந்த நெடுஞ்சாலைத் துறை தகவல் பலகை இரும்புக் கம்பத்தின் மீது காா் எதிா்பாராதவிதமாக மோதியதில் புதுமணத் தம்பதி உயிரிழந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த வீரமலையைச் சோ்ந்த மணி மகன் சந்தோஷ் (26). இவா், மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் பேக்கரி கடை நடத்தி வந்தாா். இவரது மனைவி மகாலட்சுமி (20). இவா்களுக்கு திருமணமாகி மூன்று மாதங்களே ஆன நிலையில், இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன் சொந்த ஊருக்குச் சென்று விட்டு புதன்கிழமை நள்ளிரவில் காரில் அலங்காநல்லூருக்குத் திரும்பிக்கொண்டிருந்தனா். வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில், கரூா் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கரூரை அடுத்த தளவாபாளையம் பொறியியல் கல்லூரி அருகே காா் வந்து கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து நிலைத்தடுமாறி சாலையோரம் இருந்த நெடுஞ்சாலைத் துறை தகவல் பலகை கொண்ட இரும்புக் கம்பத்தின் மீது மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனா். அவா்கள் இருவரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் இறந்தனா். வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.