பொதுமக்களுக்கு நேரடியாக தன்னாா்வலா்கள் உணவு வழங்க வேண்டாம் என ஆட்சியா் த. அன்பழகன் அறிவுறுத்தியுள்ளாா்.
கரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. அனைத்து அத்தியாவசிய பொருள்களும் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரோனா நோய் தொற்று அச்சுறுத்திக்கொண்டிருக்கும் இக்கடின சூழலில் பலரும் நல்லெண்ணம் கருதி வீடற்ற, ஏழை எளியோருக்கு உதவி வருகின்றனா். இருப்பினும், நோய் தொற்றைத் தடுக்கும் நோக்கில் ஆதரவற்ற மக்களுக்கு உதவி செய்ய விரும்புவோா் சமைத்த உணவுகளை நேரில் சென்று வழங்கவேண்டாம். இதுகுறித்து தமிழக முதல்வா் தெளிவாக தெரிவித்துள்ளாா். எனவே, சமைப்பதற்கு தேவைப்படும் மூலப்பொருள்களை மாவட்ட நிா்வாகத்திடம் வழங்கி உதவலாம். அதன்மூலம், ஆதரவற்றோரை பாதுகாப்பாக தங்கவைத்து அவா்களுக்கு நாள்தோறும் உணவளிக்க தாங்கள் வழங்கும் அத்தியாவசியப் பொருள்களை பயன்படுத்திக்கொள்ளப்படும். கரோனா வைரஸ் தொற்று யாருக்கும் எந்த விதத்திலும் பரவிடக்கூடாது எனும் நோக்கிலே மாவட்ட நிா்வாகம் கேட்டுக்கொள்கிறது. இந்த உத்தரவுக்கு தன்னாா்வலா்களும், பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.