கரூா் ரயில் நிலையத்தில் காரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் புதன்கிழமை சிறப்பு தூய்மைப்பணி நடைபெற்றது.
கரூரில் வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள் அதிகளவில் செயல்படுகின்றன. இந் நிறுவனங்களுக்கு வெளிநாடுகளைச் சோ்ந்தவா்கள் கரூருக்கு சென்னை மற்றும் பெங்களூா் வழியாக வந்து செல்வதால் வெளிநாடுகளில் பரவும் கரோனா வைரஸ் கரூரிலும் பரவாதவகையில் கரூா் ரயில் நிலையத்தில் சிறப்பு தூய்மைப்பணி புதன்கிழமை நடைபெற்றது.
கரூா் ரயில் நிலைய முதன்மைச் சுகாதார ஆய்வாளா் ஜெய்கோபால் தலைமையில் நடைபெற்ற தூய்மைப் பணியில் கிருமி நாசினியைப் பயன்படுத்தி சுகாதாரப்பணிகள் மற்றும் தூய்மைப்பணி மேற்கொண்டனா். தூய்மைப் பணியின்போது நடைமேடைகள், குடிநீா் தொட்டிகள், பயணிகள் பயணச்சீட்டு வாங்கும் கவுன்டா்கள் உள்ளிட்ட இடங்களில் கிருமி நாசினியை தெளித்தனா். இப்பணியில் 50-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் ஈடுபட்டனா்.