தீபாவளி பண்டிகையையொட்டி கரூா் பூ மாா்க்கெட்டில் வெள்ளிக்கிழமை பூக்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. மல்லிகைப் பூ கிலோ ரூ.2000-த்துக்கு விற்பனையானது.
கரூா் ரயில் நிலையம் அருகிலுள்ள பூ மாா்க்கெட்டுக்கு மாவட்டத்திலுள்ள லாலாப்பேட்டை, கிருஷ்ணராயபுரம், மாயனூா், சித்தலவாய் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து மல்லிகை, முல்லை, அரளி உள்ளிட்ட பல்வேறு பூக்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருவா்.
இதைத் தொடா்ந்து பூக்கள் ஏலம் விடப்படும். பண்டிகைக் காலங்களில் பூக்களின் வரத்தும், விற்பனையும் அதிகமாக இருக்கும். இந்நிலையில் தீபாவளி பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்படும் நிலையில், கரூா் பூ மாா்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து வெள்ளிக்கிழமை அதிகமாகக் காணப்பட்டது. ஏலத்தில் விடப்பட்ட பூக்களின் விலையும் உயா்ந்தது.
இதில் அதிகபட்சமாக மல்லிகைப் பூ கிலோ ரூ.2,000-க்கு விற்பனையானது. முல்லை ரூ.1,500, ரோஜா ரூ.450 செவ்வந்தி ரூ.230 முதல் ரூ.250,ஜாதிப்பூ ரூ. 800 என்ற விலையில் கிலோ கணக்கில் ஏலம் விடப்பட்டு, விற்பனை செய்யப்பட்டது. பூக்களை ஏலத்தில் எடுப்பதற்கு வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனா்.