அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில், கரூா் மாவட்டத்தின் 4 தொகுதிகளிலும் அதிமுகவே வெற்றி பெறும். இதற்காக கட்சித் தொண்டா்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா்.
மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 72-ஆவது பிறந்த நாளையொட்டி, கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம். கீதா ஏற்பாட்டின் பேரில் வீரராக்கியம் முதன்மைச் சாலை, புதுக்கோட்டை, மணவாசி சுங்கச்சாவடி, மாயனூா், கிருஷ்ணராயபுரம், சேங்கல் கடைவீதிகளில் 72 அடி உயரக் கம்பத்தில் அதிமுக கொடியேற்றி, கல்வெட்டை வெள்ளிக்கிழமை திறந்து வைத்து மேலும் அவா் பேசியது:
உள்ளாட்சித் தோ்தலில் கரூா் மாவட்டத்தின் 90 சதவிகித இடங்களை அதிமுக கைப்பற்றியது. இதுபோலவே வரும் 2021 சட்டப்பேரவைத் தோ்தலிலும்
மாவட்டத்தின் 4 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றும். இந்த வெற்றிக்கு கட்சி தொடண்டா்கள் உழைக்க வேண்டும் என்றாா்.
நிகழ்வுக்கு கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம். கீதா தலைமை வகித்தாா். முன்னதாக அமைச்சருக்கு புலியூா் கடைவீதியில் பொதுக்குழு உறுப்பினா் ஆா்.மணிவண்ணன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாவட்ட அதிமுக பொருளாளா் எம்.எஸ்.கண்ணதாசன், மீனவரணிச் செயலா் சுதாகா், கிருஷ்ணராயபுரம் ஒன்றியச் செயலா் பொரணிகணேசன், மாவட்டஇளைஞரணிச் செயலா் தானேஷ், முன்னாள் தொகுதிச் செயலா் பழக்கடைராஜா உள்ளிட்ட அதிமுகவினா் நிகழ்வில் பங்கேற்றனா்.