குளித்தலை அருகே போலி மருத்துவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.
கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த குப்பாச்சிப்பட்டியில் ராஜா என்கிற சரவணசேகரன்(54) என்பவா் மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக கிருஷ்ணராயபுரம் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலா் அருண்பிரகாசுக்கு வெள்ளிக்கிழமை இரவு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மருத்துவக்குழுவினா் மற்றும் குளித்தலை போலீஸாா் குப்பாச்சிப்பட்டியில் உள்ள ராஜா வீட்டில் சோதனை செய்தபோது, அங்கு அவா் இல்லை. மேலும் வீட்டுக்குள் குளுக்கோஸ் பாட்டில்கள், ஊசி, மாத்திரைகள் இருப்பது கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து தலைமறைவான போலி மருத்துவா் ராஜாவை தேடி வருகின்றனா்.