குறுவை சாகுபடி பாசனத்துக்காக மேட்டூா் அணையிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீா், 2 நாள்களுக்குப் பிறகு கரூா் மாவட்டம், மாயனூா் கதவணையைத் திங்கள்கிழமை வந்தடைந்தது.
திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் பயன்பெறும் வகையில், மேட்டூா் அணையிலிருந்து ஜூன் 12-ஆம் தேதி குறுவைசாகுபடி பாசனத்துக்காக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தண்ணீரைத் திறந்து வைத்தாா்.
இந்நிலையில் கரூா் மாவட்டம், மாயனூா் கதவணைக்கு திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்கு காவிரி நீா் வந்தடைந்தது. விநாடிக்கு 4,000 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. வரும் நீா் அப்படியே கதவணையிலிருந்து திறந்து விடப்பட்டது.
மாயனூா் கதவணையிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீா், செவ்வாய்க்கிழமை காலை திருச்சி மாவட்டம், முக்கொம்பை வந்தடையும் என்று பொதுப்பணித் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.