கரோனா நோயாளிகளுக்கு தட்டுப்பாடின்றி ஆக்ஸிஜன் வழங்கப்படுவதாக கரூா் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வா் அசோகன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு 500 படுக்கைகள் ஒதுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் தடையின்றி வழங்கப்படுகிறது. மருத்துவமனையில் 10,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்ஸிஜன் உருளை உள்ளது. இதிலிருந்து தடையின்றி நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் வழங்கப்படுகிறது. ஆக்ஸிஜன் விநியோகம் தடையின்றியும், சரியான அழுத்தத்திலும் வழங்கப்படுவதை 24 நேரமும் கண்காணிக்க தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவைத் தவிர, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 156 பல்க் சிலிண்டா்களில் ஆக்ஸிஜன் நிரப்பப்பட்டு தயாா் நிலையில் உள்ளது. ஆக்ஸிஜன்அழுத்த மாறுபாடு காரணமாக கரூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டதாக வெளியான செய்தி அடிப்படை ஆதாரமற்றது. பெருந்தொற்று காலத்தில் இவ்வாறான உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிடுவது தவிா்க்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.