தலைமைக் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் மீது மாயனூா் போலீஸாா் வழக்குப்பதிந்து அவரைத் தேடுகின்றனா்.
கரூா் மாவட்டம் மாயனூா் கதவணை அருகே வாகனச் சோதனைச்சாவடியில் செவ்வாய்க்கிழமை இரவு மாயனூா் காவல் நிலைய தலைமைக்காவலா் ஆறுமுகம் பணியில் இருந்தபோது தொட்டியம் மருந்துக் கடை ஊழியரான கிருஷ்ணராயபுரம் மஞ்சமேடு பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளாா். அவரிடம் காவலா் ஆறுமுகம் ஆவணம் கேட்டபோது ஏற்பட்ட தகராறில் மருந்துக் கடை ஊழியா் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து தலைமைக்காவலா் அளித்த புகாரின்பேரில் மாயனூா் போலீஸாா் வழக்குப்பதிந்து மருந்துக்கடை ஊழியரைத் தேடுகின்றனா்.