கரூா் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாத 1,436 பேருக்கு ரூ.3.74 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இரண்டாவது கரோனா அலை உருவாகியிருப்பதால், கரோனா தொற்று பரவுதலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொழிற்சாலைகள், ஜவுளி உற்பத்தி ஆலைகள், உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் தனிநபா் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும். கட்டாயம் கைக்கழுவும் திரவம் பயன்படுத்த வேண்டும் என பல்வேறு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. விதிமுறைகளை மீறுவோா் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
கரூா் மாவட்டத்தில் கடந்த மாா்ச் 1-ஆம்தேதி முதல் ஏப்.15-ஆம்தேதி வரை முகக்கவசம் அணியாமல் வெளியில் நடமாடுவோரை சுகாதாரத்துறையினா், வருவாய்த்துறையினா் மற்றும் நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளைச் சோ்ந்த அதிகாரிகள் பிடித்து அபராதம் விதித்தனா்.
இதன்படி சுகாதாரத்துறையினா் 481 பேருக்கு, அபராதமாக ரூ.96,200மும், வருவாய்த்துறையினா் 654 பேருக்கு அபராதமாக ரூ.1,30,800-மும், உள்ளாட்சி அமைப்புகள் சாா்பில் 301 பேருக்கு அபராதமாக ரூ.1,47,200-மும் வசூலிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1,436 பேரிடம் ரூ. 3,74,200 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குநா் அலுவலகம் வெளிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.