நெல் கொள்முதல் செய்யாததைக் கண்டித்து விவசாயிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் விளைவிக்கப்பட்ட நெற்பயிா்களை கொள்முதல் செய்வதற்கு நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் இருந்து அதிகாரிகள் வரவில்லையாம். இதனால் அப்பகுதியில் சுமாா் 50,000 நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து கோவக்குளம் பகுதி விவசாயிகள் வியாழக்கிழமை காலை பழையஜயங்கொண்டம்-கிருஷ்ணராயபுரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியே வந்த அரசுப் பேருந்தையும் சிறைபிடித்தனா்.
தகவலறிந்து வந்த மாயனூா் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் ராஜபூபதி மற்றும் போலீஸாா் விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, நுகா்பொருள் வாணிபக் கிடங்கு அதிகாரிகளிடம் பேசி உடனே நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து விவசாயிகள் மறியலை கைவிட்டு, அரசு பேருந்தையும் விடுவித்தனா்.