ஆடி மாத பிறப்பையொட்டி, கரூரில் தேங்காய் சுடும் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
திருமாநிலையூா் அமராவதி ஆற்றுப்பாலத்தின் கீழ்ப் பகுதி, ஐந்துசாலை உள்ளிட்ட பகுதிகளில் தேங்காய் சுடும் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான புதுமண ஜோடிகள் மற்றும் பெண்கள் திரளாக பங்கேற்றனா்.
முற்றிய தேங்காய் கண்ணைத் துளையிட்டு அதிலிருக்கும் தண்ணீரை வெளியேற்றி அதனுள் அச்சுவெல்லம், பச்சரிசி, எள், பொட்டுக்கடலை கலந்த பின் நீண்ட குச்சியில் தேங்காய் கண்ணை சொருகி தீயில் இட்டு சுட்டனா். பின்னா் தேங்காயை உடைத்து, அதிலிருந்த பொருள்களை வெளியே எடுத்து தங்களது இஷ்ட தெய்வங்களை வழிபட்டு உண்டனா்.
ஆடி மாத பிறப்பை முன்னிட்டு கரூா் பசுபதீசுவரா் கோயில், தாந்தோனிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில், வெண்ணைமலை முருகன் கோயில், புகழிமலை முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.